செவ்வாய், 11 அக்டோபர், 2011

கிழிக்க மட்டுமே தெரிந்த தலைவர்கள் கிழிக்கிறார்கள்: சுப.வீரபாண்டியன்

தமிழகத்திலேயே பாடப் புத்தகங்களையெல்லாம் கிழிக்கிறார்கள். என்ன செய்வது, எழுதத் தெரிந்த தலைவர்களாக இருந்தால் எழுவார்கள். கிழிக்க மட்டுமே தெரிந்த தலைவர்கள் கிழிக்கிறார்கள் என்று திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறினார்.
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் பேசுகையில்,
இது வெறும் இடைத்தேர்தல் மட்டுமல்ல. கடந்த 5 மாத காலத்திலே இந்த ஆட்சி என்ன கொடுமைகளையெல்லாம் செய்திருக்கிறது என்று, எடைப் போட்டு பார்க்க இருக்கின்ற 'எடைத் தேர்தல்'. திருச்சி மாநகர மக்கள் சரியாக எடை போடுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.
திருச்சியின் நாளைய மேயர் மேடையில் அமர்ந்திருப்பதைப்போல, நாளைய சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு அவர்களும் இந்த மேடையில் இருந்திருக்க வேண்டும். இப்போது திருச்சி நீதிமன்றத்திலே தான் இருக்கிறார். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. நீதிமன்றத்தின் ஜாமீன் கிடைத்து, இந்தக் கூட்டம் முடிவடைவதற்கு முன்பு நேரு அவர்கள் இந்த மேடைக்கு வந்துவிட மாட்டாரா என்று நான் ஆசைப்படுகிறேன்.

ஆனால், அந்த அம்மையார் இல்லை அவரை சட்டமன்ற உறுப்பினராக்கி தான், திருச்சி அனுப்புவேன் என்று ஆசைப்படுகிறாரோ என்னவோ நமக்கு தெரியாது.

இந்த மேடையை கவனித்துப் பாருங்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் இருந்த தலைவர்கள் அனைவரும் இந்த மேடையில் இருக்கிறார்கள். ஆனால் அந்த அம்மையாரோடு இருந்த தலைவர்களில் யாராவது ஒரே ஒருவராவது இன்று அந்த அம்மாவோடு இருக்கிறார்களா?. பேசுகிறார்களா?.

பேசுகிறார்கள். தொலைக்காட்சியிலே பேசுகிறார்கள். நீங்கள் கேட்டிருப்பீர்கள். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சொல்கிறார், யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். அதிமுகவுக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள். சொல்வது யார்?. நேற்று வரைக்கும் அவர்கள் கூட இருந்த கிருஷ்ணசாமி.

அதைவிட பெரிய வேடிக்கை என்ன தெரியுமா. இந்த அரசின் அராஜகத்தை வன்முறையை, அடக்குமுறையை பொருத்துக் கொள்ள முடியவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவனே சொல்லுகிறார். 'இளங்கோவனே' என்று நான் சொல்லுவதற்கு என்ன பொருள் என்று உங்களுக்கு தெரியும்.

அடுத்தததாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகிறார். கூடங்குளத்திலே உண்ணாவிரதம் இருக்கிற மக்கள் இவரது கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் குஜராத்திலே உண்ணாவிரதம் இருக்கிற மோடியை ஆதரித்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜெயலலிதா அனுப்புகிறாரே, இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இருந்த மோடியை ஆதரித்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்த ஜெயலலிதா, கூடங்குளத்தில் உண்ணாவிரதம் இருந்த மக்களை சந்திக்க இரண்டு வார்டு கவுன்சிலர்களையாவது அனுப்பினாரா? என்று கேட்கிற ஜவாஹிருல்லா சொல்கிறார், இஸ்லாமிய மக்கள் இனிமேல் அந்த அம்மையாருக்கு மறந்தும் வாக்களிக்க மாட்டார்கள் என்கிறார்.

இங்கே நம்முடைய ஸ்ரீதர் வாண்டையார் அவர்கள் பேசுகிறபோது சொன்னார், தலைவர் அவர்கள் வீட்டிற்கு போனால் இன்றைக்கும் அந்த மரியாதையோடு நாங்கள் நடத்தப்படுகிறோம் என்றார். சொல்லித் தெரியவேண்டியதில்லை. கோபாலபுரத்துக்கு போய் அவமானப்பட்ட தலைவர்களும் இல்லை. போயஸ் தோட்டத்துக்கு போய் அவமானப்படாமல் திரும்பிய தலைவர்களும் இல்லை. இன்றைக்கு எல்லா தலைவர்களும் திரும்பி விட்டார்கள்.

தமிழகத்திலேயே பாடப் புத்தகங்களையெல்லாம் கிழிக்கிறார்கள். என்ன செய்வது, எழுதத் தெரிந்த தலைவர்களாக இருந்தால் எழுவார்கள். கிழிக்க மட்டுமே தெரிந்த தலைவர்கள் கிழிக்கிறார்கள். ஆக்கத் தெரிந்த தலைவர்களாக இருந்தால் ஆக்குவார்கள். அழிக்க மட்டுமே தெரிந்தவர்களாய் இருப்பதாலே திட்டங்களையெல்லாம் அழிக்கிறார்கள் என்றார்.

கரண்ட் எப்ப வரும்...

கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா எம்.பி, தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடந்தபோது, நமக்கு எதிரே வந்து வாக்கு சேகரித்த இன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் வைத்த வாதம், தமிழ்நாட்டில் மின்சார வெட்டு அதிகமாக இருக்கிறது என்றார். நாம் சில நியாயமான விளக்கங்களை சொன்னோம்.

தமிழ்நாட்டில் நிரந்தரமாக மின்சார பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்கு சில திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. 2011-12ல் தமிழ்நாடு தன்னிரைவு பெறும் என்று சொன்னபோது, கையாலாகாத அரசின் காரணங்கள் இவை ஆட்சிக்கு வந்து 6 மணி நேரத்தில் மின்சார வெட்டை சரிசெய்வேன் என்று சொன்ன, இந்த ஆட்சியில் மின்சார வெட்டு இருக்கிறதா இல்லையா சொல்லுங்கள். எந்த நேரத்தில் மின்சாரம் போகும் என்று தெரியவில்லை. எந்த நேரத்தில் கிடைக்கும் என்று தெரியவில்லை.

தமிழ் இனத்தின் அடையாளமாக திகழ்கின்ற திருவள்ளுவரின் படத்தை மறைத்த ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசனுடைய நூல்களை உலகின் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்க செய்வோம் என்று ஆளுநர் உரையில் அறிவித்துவிட்டு, பாரதிதாசன் எழுதிய பக்கத்தை கிழித்தெரிகிற ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக