ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்?

டெல்லி: மூன்று முக்கிய அம்சங்களை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார் அன்னா ஹஸாரே. இதை மிகப் பெரிய வெற்றியாக அன்னாவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே அன்னாவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறதா?

நிச்சயம் இது முழு வெற்றி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், ஏற்கனவே பல முக்கியக் கோரிக்கைகளை அன்னா ஹஸாரே குழு மத்திய அரசுக்காக கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. எனவே மத்திய அரசின் லோக்பால் மசோதாவை விட பலவீனமான மசோதாவாக தற்போது ஜன் லோக்பால் மசோதா மாறியிருப்பதாக கூறப்படுகிறது.

அன்னா தரப்பில் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளவையாக கூறப்படுபவை...

பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், சிபிஐயை கொண்டு வர வேண்டும், நீதித்துறையைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் அன்னா குழுவின் மிக முக்கிய கோரிக்கைகள். இதை ஆரம்பத்தில் மத்திய அரசு ஏற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேசமயம் நீதித்துறையை தனியாக ஒரு மசோதாவின் கீழ் கொண்டு வரலாம் என்றும் மத்திய அரசு கூறியது.

இந்த நிலையில் இந்த முன்று பிரிவையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர முடியாது என்று மத்திய அரசு திடீரென கூறியது. கடும் இழுபறிக்குப் பின்னர் இதை அன்னா குழு ஏற்றுக் கொண்டு விட்டது.

அதேபோல அன்னா குழு விட்டுக் கொடுத்த பிற முக்கிய விஷயங்கள்...

- ஒருவர் மீது ஊழல் புகார் வந்தால் அவரை விசாரித்துகஸ் கைது செய்யும் அளவிலான முழு அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்பு அமைக்கப்பபட வேண்டும் என்ற கோரிக்கை.

- ஊழல் புரிந்தவர்களுக்குக் கடுமையான தண்டனை தர வேண்டும் என்ற அம்சம்.

- லோக்பால் உறுப்பினர்களை நியமிப்பதில் அரசுக்கு குறைந்த அளவிலான பங்கு.

இப்படி பல முக்கியமான அம்சங்களை அன்னா குழு கைவிட்டிருப்பதால், அன்னாவின் ஜன் லோக்பால் மசோதாவும் கூட தற்போது பலவீனமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

3 அம்சங்களை நாடாளுமன்றம் ஏற்பதாக தீர்மானம் நிறைவேற்றி, அதை அன்னாவும், அவரது குழுவினரும் ஏற்றுக் கொண்டு விட்டதால், மறுபடியும் பழைய கோரிக்கைகளை முன்வைத்து அன்னா குழு போராட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் இந்த மூன்று அம்சங்களை விட மிக முக்கியமான கோரிக்கைகளை அன்னா குழு கைவிட்டிருப்பதன் மூலம் மேலும் புதிய சலசலப்பு எழுந்துள்ளது. கீழ் மட்ட அரசு அதிகாரிகளை லோக்பாலில் சேர்க்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த அன்னா குழுவினர், பிரதமர், நீதித்துறை, சிபிஐ ஆகியோரை மட்டும் விட்டு விட முன்வந்தது அரசு ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

எனவே எப்படிப்பட்ட லோக்பால் மசோதா அமையப் போகிறது, அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு உரிய பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக