திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஜெ., உறுதி.சமச்சீர் கல்வி

புதுடில்லி : சமச்சீர் கல்வி வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது. கடந்த 2 வாரகாலமாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை, வியாழக்கிழமை அன்று முடிவுற்றது. அதனைத் தொடர்ந்து நாளை இறுதித்தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. நீதிபதி பன்சால் தலைமையிலான நீதிபதிகள் குழு தீர்ப்பை வழங்க உள்ளது.

10.30 மணிக்கு தீர்ப்பு : நீதிபதி பன்சால் தலைமையிலான நீதிபதிகள் குழு, காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தீர்ப்பு அமல் : சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்ததும் சமச்சீர் கல்வி குறித்த தீர்ப்பு அமல்படுத்தப்படும் என சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 04ம் தேதியன்று நடப்பு நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மீதான விவாதம் சட்டமன்றத்தில் இன்று துவங்கியது. விவாத நேரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., நஞ்சப்பன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா அறிக்கைகள் சிலவற்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது : சென்னை நகரின் சுற்றுப்புற தூய்மை குறித்து கடந்த வாரம் ஹெலிக்காப்படர் மூலம் ஆய்வு செய்தேன்; அப்போது சென்னை நகரின் பல பகுதிகளில் குப்பைகளும், கழிவுநீர்களும் அகற்றப்படாமல் தூய்மைக்கேடு விளைவித்து வருவதை கண்டேன்; சென்னை நகரில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் ஆகியவற்றை அகற்ற அடுத்த 3 மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அதற்கு நிரந்தர தீர்வு காணவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்; இரவு நேரங்களில் உயர்மின் அழுத்தத்தில் இயங்கும் பெரிய தொழில்சாலைகளுக்கு இதுவரை இருந்து வந்த 90 சதவீத மின்வெட்டு இன்று முதல் 20 சதவீதம் குறைக்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்; குடிநீர் வசதி இல்லாத குடியிருப்புக்கள் குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் விவாதத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரன், சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, சமச்சீர் கல்வி தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது; எப்படிபட்ட தீர்ப்பாக இருப்பினும் தீர்ப்பு இன்றே வருமானால், தமிழக அரசு உடனடியாக அதனை அமல்படுத்தும் என உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக