ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

மக்களின் வெறுப்புக்காளான அமிதாப்பின் ஆராக்ஷன்!

தொடரும் தீவிர ஆர்ப்பாட்டம்...
amithab-1சென்னை: இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்ற உப தலைப்போடு திரைக்கு வந்துள்ள அமிதாப் பச்சனின் ஆராக்ஷன் திரைப்படத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுவரை அரசியல் கட்சிகள் மட்டுமே இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இப்போது ஒடுக்கப்பட்ட இன மக்களின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் இந்தப் படம் ஆளாகியுள்ளது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கோபத்தைச் சம்பாதித்துள்ளார் அமிதாப் பச்சன்.

மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை கேவலமாக கிண்டலடிக்கும் காட்சிகளும், வசனங்களும் ஆராக்ஷன் படத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்கவேண்டும் என்று கண்டித்து உபி, பஞ்சாப் மற்றும் ஆந்திரா ஆகிய மூன்று மாநில அரசுகள் இந்தப் படத்துக்கு தடை விதித்துள்ளன.

இந்த 3 மாநிலங்களை தவிர்த்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங் களிலும் ஆராக்ஷன் படம் வெளியிடப்பட்டது. சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், ஈகா, பி.வி.ஆர். மெலோடி, மாயாஜால், ஏ.ஜி.எஸ், பேம் நேஷனல் ஆகிய தியேட்டர்களில் ஆராக்ஷன் படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை தடை செய்யக்கோரி சத்யம் தியேட்டர் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் வெங்கடேசன், ஏழுமலை, ஜமுனா கேசவன், செயலாளர் சிற்றரசு உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

'தடை செய், தடை செய் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆராக்ஷன் படத்தை தடை செய்' என்று கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கிடையாது என்பதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று இந்தப் படத்துக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.

இதற்கிடையே, சென்னையைச் சேர்ந்த பொதுநல அமைப்புகள், ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களைத் திரட்டி ஆராக்ஷன் வெளியாகியுள்ள திரையரங்குள் முன்பு போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன. மேலும் அமிதாப்பச்சனைக் கண்டித்தும் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றனர்.

பொதுவாக அமிதாப் மீது அனைத்துப் பிரிவினருக்குமே அபிமானம் உண்டு. ஆனால் இந்த ஆராக்ஷன் படம் காரணமாக பிற்படுத்தப்பட்ட மக்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளார் அவர் என்று திரையுலகில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்தப் படத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அமிதாப் மற்றும் இந்தப் படத்தின் பேனர்களைக் கொளுத்தி வருகின்றனர் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக