திங்கள், 22 ஆகஸ்ட், 2011

தத்து எடுத்தவர்கள் மரணம் மகளுக்கு கார்டியனாக மாறினர் பெற்றோர்

புதுடெல்லி : தத்து எடுத்தவர்கள் இறந்ததால் பெற்ற மகளுக்கே கார்டியனாக பெற்றோர் மாறினர். டெல்லியை சேர்ந்தவர் தேஜேந்திர் சர்மா. இவரது மனைவி ரேணு.  2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், இவர்களுக்கு கடந்த 96ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி 3வது பெண் குழந்தை பிறந்தது. 1997ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி குழந்தையை ரேணுவின் சகோதரி சுமன் கவுருக்கு சட்டப்படி தத்து கொடுத்தனர்.

இந்த நிலையில், சுமன் கவுர், அவரது கணவர் அசோக் ஆகியோர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அடுத்தடுத்து இறந்து விட்டனர். இதையடுத்து, தத்து எடுக்கப்பட்ட குழந்தை அனாதையானது. 15 வயதான தங்களின் மகளை தாங்களே வளர்க்க சர்மாவும் ரேணுவும் விரும்பினர். இதையடுத்து, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சர்மா தம்பதி, Ôதத்து எடுத்த பெற்றோர் இறந்துவிட்டதால், சொந்த மகள் தவிக்கிறாள். அவளுக்கு எங்களை சட்டப்பூர்வ பாதுகாவலராக நியமிக்க வேண்டும்Õ என்று மனுவில் கூறியிருந்தனர்.

மனுவை நீதிபதி சஞ்சய் சர்மா விசாரித்து,‘ தத்து கொடுக்கப்பட்ட குழந்தை விஷயத்தில் சொந்த பெற்றோர் தலையிட முடியாது. எனினும், குழந்தையின் கல்வி, எதிர்காலம் கருதி அவர்களை பாதுகாவலராக நியமிக்கிறோம். மேலும், பெண் குழந்தையும் தனது சொந்த தாய், தந்தையுடன் வாழ விரும்புகிறது. இதை கருத்தில் கொண்டு தேஜேந்திரும் ரேணுவும் பாதுகாவலராக இருக்கலாம். தத்தெடுத்த பெற்றோர் மூலம் குழந்தைக்கு கிடைத்த சொத்துக்களுக்கும் சொந்த பெற்றோர் பாதுகாவலராக இருக்கலாம். சொத்து விஷயத்தில் கோர்ட் அனுமதியின்றி முடிவு எடுக்க கூடாது’ என்று தீர்ப்பளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக