திங்கள், 25 ஜூலை, 2011

தோல்விக்கு நான்தான் காரணம்....கலைஞர் பேட்டி

கருணாநிதி பேட்டி:

மாலையில் பொதுக் குழுக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி,

கேள்வி: காங்கிரஸ் மீதான அதிருப்தியால் தான் மத்திய அரசில் திமுக புதிதாக 2 அமைச்சர்களை சேர்க்கவில்லையா?

பதில்: கட்சியின் மீது எங்களுக்கு அதிருப்தி இல்லை. ஆனால் இங்கே சில பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் மீது இருக்கிற அதிருப்தியை நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம். அதாவது சில காங்கிரஸ்காரர்கள் இங்கே கூட்டங்களில் பேசுகிறார்கள். அவர்கள் வெளிப்படுத்துகிற அதிருப்தியைதான் பொதுக்குழுவிலே உறுப்பினர்கள் எல்லாம் எடுத்து சொன்னார்கள். அதன் காரணமாகத்தான் எந்த மாற்றத்தையும், இப்போது நாங்கள் செய்யாமல், மத்திய அமைச்சர் பதவியை ஏற்காமல், புதிய அமைச்சர்களாக யாரையும் நியமிக்காமல், ஏற்கனவே இருக்கிற அமைச்சர்கள் அப்படியே நீடிப்பார்கள் என்று கூறியிருக்கிறேன்.

கேள்வி: பிரதமர் மன்மோகன் சிங் 2 இடங்கள் பற்றி திமுக அறிவிக்கும் என்று சொல்லி இருந்தாரே?

பதில்: தி.மு.கழகத்தின் முடிவைத்தான் இப்போது அறிவித்து இருக்கிறேன்.

கேள்வி: சி.பி.ஐ. ஏற்கனவே போபர்ஸ் வழக்கில் உலக அளவில் அது ஒரு சார்பானது என்பதை நிரூபித்திருக்கிறது. தற்போது நீங்கள் சி.பி.ஐ. உள்நோக்கத்தோடு செயல்பட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறீர்கள். அதை காரணமாக வைத்து நீங்கள் சி.பி.ஐ. மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: நாங்கள் சி.பி.ஐ. என்ற அமைப்பையே குற்றம் சொல்ல வில்லை. அந்த அமைப்பிலே உள்ள சிலர்- அந்த அமைப்பின் பொறுப்பிலே உள்ளவர்கள்- சில பேர் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

கேள்வி: உங்களுக்கு பிறகு யார் உங்கள் கட்சியின் தலைமைக்கு வருவார்கள் என்று கேட்டதற்கு நீங்கள் பொதுக்குழுதான் அதை முடிவு செய்யும் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த பொதுக்குழுவில் அடுத்த தலைமையைப் பற்றி முடிவு செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாக இருந்தது. அதைப் பற்றி முடிவெடுக்கப்பட்டதா?

பதில்: ஒவ்வொரு பொதுக்குழு கூடும் போதும், மீடியாக்கள் செய்கிற கலகத்துக்காக நாங்கள் ஆட்களையோ, தலைவர்களையோ மாற்றிக் கொண்டிருக்க முடியாது. இது சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட கட்சி. அண்ணா காலத்தில் இருந்து சட்ட திட்டங்கள், விதிமுறைகளை வகுத்துக் கொண்டு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவது-எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்களைச் சேர்ப்பது-தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்றெல்லாம் திட்டமிட்டு பணி புரிகின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக்கழகம். இந்த கேள்வியைக் கேட்ட சேகர் போன்றவர்களின் இஷ்டத்துக்கு நாங்கள் மாற்றிக் கொண்டு இருக்க முடியாது.

கேள்வி: இன்றைக்குக்கூட பொதுக்குழுவில் பேசிய மூத்த தலைவர் எதிர்காலத்திற்கு ஒரு மூத்த தலைவரைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்று பேசியிருக்கிறாரே? (இந்தக் கேள்வியைக் கேட்டது சேகர் என்ற பத்திரிக்கையாளர்)

பதில்: சேகர் என்ற செய்தியாளரை தி.மு.கழகத்தின் எதிர்கால தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று கூட பேசினார்கள்... (சிரிக்கிறார்)

கேள்வி: பொதுக்குழுவின் மாலைக்கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லையே?

பதில்: பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை என்றால் வந்தே இருக்க மாட்டார். வந்திருந்தார், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற்குப் பிறகுதான் ஊருக்குச் சென்றிருக்கிறார்.

கேள்வி: இந்த தேர்தல் தோல்விக்கு திமுகதான் காரணம் என்று பா.ம.க. சொல்லியிருக்கிறது. கொங்குநாடு முன்னேற்றக்கட்சியும் சொல்லியிருக்கிறதே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?


பதில்: தி.மு.கழகத்தின் இந்த தோல்விக்கு நான்தான் காரணம் என்று பொதுக்குழுவிலே நானே பேசியிருக்கிறேன். அதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறேன் என்றார் கருணாநிதி.கலைஞர் பேட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக