ஞாயிறு, 17 ஜூலை, 2011

சி.பி.ஐ. மீது கனிமொழி புகார்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. கடந்த மே மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் சி.பி.ஐ. கோர்ட்டிலும் தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டிலும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இதனால் கனிமொழி கடந்த 2 மாதமாக ஜெயிலில் இருக்கிறார்.

இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின் சி.பி.ஐ. கோர்ட்டில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

சி.பி.ஐ. இன்னும் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்புதான் குற்றச்சாட்டு பதிவாகும். இதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சி.பி.ஐ. வேண்டுமென்றே தேவையில்லாமல் வழக்கை இழுத்தடிப்பதாக கனிமொழி புகார் தெரிவித்துள்ளார்.

நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின்போது கனிமொழி, ஆ.ராசா உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் நீதிபதி சைனியிடம் இந்த புகாரை தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தேவையான ஆவணங்களை சி.பி.ஐ. தராமல் மறைப்பதாகவும், வேண்டுமென்றே வழக்கு விசாரணையை இழுத்தடிப்பதாகவும் வக்கீல்கள் குற்றம் சாட்டினர். வக்கீல்கள் வாதங்களை கேட்ட நீதிபதி சைனி இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக