ஞாயிறு, 31 ஜூலை, 2011

தூத்துக்குடி கொழும்பு கப்பல்: 3,528 பேர் பயணம்


தூத்துக்குடி கொழும்பு சுற்றுலா கப்பலில் இதுவரை இருமார்க்கத்திலும் 3,528 பேர் பயணம் செய்துள்ளனர்.
வாரம் இருமுறை இயக்கப்படும் இந்த சொகுசு கப்பல் சேவையை, கடந்த ஜூன் 13ம் தேதி, மத்திய அமைச்சர் வாசன் துவக்கி வைத்தார். இதன் மூலம் தூத்துக்குடியிலிருந்து கொழும்புவுக்கு 2,147 பேரும், கொழும்புலிருந்து தூத்துக்குடிக்கு 1,381 பேரும் என மொத்தம் 3,528 பேர் இதுவரை இருமார்க்கத்திலும் பயணம் செய்துள்ளனர்.
இதற்காக, தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் பயணிகள் முனையம், ஏற்கனவே இரண்டு கோடி ரூபாயில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, இங்கு 1,350 பேர் அமரக்கூடிய வகையில், 450 சொகுசு இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது நடக்கும் பனிமயமாதா பேராலய திருவிழாவுக்கு தூத்துக்குடி வரும் இலங்கை பக்தர்களின் வசதிக்காக, ஒரு லட்சம் ரூபாயில் கூடுதலாக 150 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,500 பேர் வரை இங்கு அமரலாம். இத்தகவலை, துறைமுக தலைவர் சுப்பையா ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக