திங்கள், 15 நவம்பர், 2010

ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்!


பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில், மத்திய அமைச்சர் பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்ததாக திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தி.மு.க. தலைமைக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும், பிள்ளைப் பிராயத்தில் இருந்து தன்மான இயக்கத்தின் வழி பற்றி நடந்து வருபவரும், பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்ற அரசியல் சமுதாய சீர்திருத்த தலைவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து செல்பவரும், என் உள்ளம் கவர்ந்த தம்பிமார்களில் ஒருவராக விளங்கி வருபவரும்; பழைய திருச்சி மாவட்டம் பெரம்பலூர் பகுதியில் பட்டிக்காட்டு பொட்டலில் பூத்துக் குலுங்கி வரும் புரட்சியாளருமான அருமைத் தம்பி ராசா  தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கும், அந்த வாய்ப்பை வழங்கிய தலைமைக்கழகத்திற்கும் என்றென்றும் நம்பிக்கைக்குரியவராகவும்; ஏற்றுக் கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமையுணர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து  தலித்  இனத்தின் தகத்தகாய கதிரவனாகவும் விளங்குபவர் என்பதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக அறிவார்கள்.

அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டுமென்று திட்டமிட்ட முயற்சி பல நாட்களாக நடைபெற்று, ஜனநாயகக் கூடங்களில் சந்தைக்கடை இரைச்சல் மேலிடவும், நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை விவாதித்திடவும், அணுகிடவும் முடியாத அளவிற்கு ஜனநாயக மன்றங்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடவுமான செயல்கள் தொடர்ந்து ஓராண்டுக் காலமாக நிகழ்த்தப்பெற்று வருகின்றன.

அவர் மீது என்ன பழி சுமத்தப்படுகிறது என்று பார்த்தால்; 1999 முதல் மத்தியில் உள்ள தகவல் தொழில் நுட்பத்துறை 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எந்த முறையைக் கையாண்டு அளித்து வந்ததோ, அதே முறையைத்தான் தம்பி ராசா பின்பற்றினார் என்றெல்லாம் அளிக்கப்பட்ட விளக்கங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளாமல், அவர் ராஜினாமா செய்தே தீர வேண்டுமென்று பிடிவாதம் செய்து நாடாளுமன்ற அவைகளையே நடக்க விடாமல் செய்து வருகிறார்கள்.

எல்லோராலும் நடத்தப்படுகிற குழப்பம் அல்ல; குழப்பத்தை உருவாக்கப் பலர் தேவையில்லை; சிலரே போதும்; அந்தச் சிலரால் இன்று இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிர்வாகத்தையும், பாராளுமன்ற நடவடிக்கைகளையும் தடைப்படுத்துவதன் மூலம் முழுதும் ஸ்தம்பித்துப் போகக் கூடிய சூழலை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்தை   அதன் மாண்பை, அதன் நடுநிலையைத் தழைத்திடச் செய்யவும், தக்க வைத்திடவுமான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்த ஜனநாயக நெறியிலேதான் நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். அந்த 



நெறிக்கே விபத்து ஏற்படும்போது, அந்த விபத்திலே இருந்து இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக, பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

அதனை நிலைநாட்டிடும் வகையில் பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருக்கின்ற தம்பி ஆ.ராசா அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதென்று முடிவெடுத்து அவருக்கும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக