ஞாயிறு, 7 நவம்பர், 2010

சிறைக்கைதிகள் தாக்கியதில் 75 மேற்பட்ட பொலிஸார் படுகாயம்.


வெலிகடைச் சிறைச்சாலையினுள் போதைப் பொருள் கண்டுபிடிப்பதற்காக நுழைந்த பொலிஸார் மீது சிறைக் கைதிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 75 மேற்பட்ட பொலிஸார் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இன்று நண்பகலளவில் சிறைச்சாலை வளாகத்தினுள் நுழைந்த சுமார் 100 பேர் கொண்ட பொலிஸ் குழுவில் ஒரிருவரே பாரிய காயங்கள் இன்றி தப்பியுள்ளாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது. 44 பொலிஸாரே காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

போதைப்பொருள் கண்டு பிடிப்பதற்காக சிறைச்சாலையினுள் நுழைந்த பொலிஸார் கைதிகள் அனைவரையும் சிறைக்கூடுகள் மற்றும் அறைகளிலிருந்து ஒரே நேரத்தில் வெளியே எடுத்து அறைகள் சிறைக்கூடுகளை சோதனையிட்டபோது ஒன்றிணைந்த சிறைக்கைதிகள் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். முதலில் கைதிகள் கிடைத்த கற்கள் தடிகளால் பொலிஸார் மீது வீசி தாக்குதல் தொடுத்த சிறைக்கைதிகள் பின்னர் பொலிஸாரை ஒவ்வொருவராக பிடித்து அடித்து தாக்கியுள்ளனர்.

இச்செயலுக்கு சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் சிறைக்கைதிகளுக்கு கிடைத்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. சிறைச்சாலைகளில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியுடனேயே இடம்பெறுகின்றது. இந்நிலை யில் பொலிஸார் முன்னறி வித்தலின்றி சிறைச்சாலைகளினுள் நுழையும்போது சிறைச்சாலை அதிகாரிகளும் அளெசகரியங்களை சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக