திங்கள், 4 அக்டோபர், 2010

Pakistan:தெற்காசியாவில் புலிகள்மூலம் தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களைத் தோற்றுவித்தது இந்தியாவே

தெற்காசியாவில் புலிகள்மூலம் தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களைத் தோற்றுவித்தது இந்தியாவே என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் தூதுக்குழுவைச் சேர்ந்த அம்ஜாட் ஹ_சைன் சியால் அயல்நாடுகளில் பயங்கரவாத சக்திகளுக்கு இந்தியா ஆதரவளித்ததாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அத்துடன், மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பான தமிழ்ப் புலிகளுக்கும் இந்தியாவே உதவியதாக அவர் சாடியுள்ளார். தெற்காசிய பிராந்தியத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குல்களை தமிழ்ப் புலிகளே அறிமுகப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துடன் பாகிஸ்தானைத் தொடர்புபடுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சியால் ஐ.நா.வின் 192 உறுப்பு நாடுகளில் இந்தியாவே காஷ்மீரில் அரச பயங்கரவாதத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். புதுடில்லியின் அடக்கு முறைக்கு எதிராகவே காஷ்மீர் மக்கள் கிளர்ச்சியில் தஞ்சமடைந்ததாக அவர் கூறியுள்ளார். இந்தியாவானது மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பை உருவாக்கிப் போஷித்தது. அந்த அமைப்பானது எமது பிராந்தியத்தில் தற்கொலைத் குண்டுத்தாக்குதலை அறிமுகப்படுத்தியது என்று அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பிராந்தியமானது இந்தியாவின் ஓர் அங்கமென கிருஷ்ணா உரிமை கோரியிருப்பது குறித்துத் தெரிவித்த சியால் சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியானது ஐ.நா.வின் நிகழ்ச்சி நிரலில் இருந்ததாகவும் அது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரானது இந்தியாவினதோ அல்லது பாகிஸ்தானதோ சொத்து அல்ல என்றும் அது காஷ்மீர் மக்களுக்குச் சொந்தமானது என்று இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு உறுதியளித்திருந்தார். அதனைப் பாகிஸ்தான் வரவேற்றிருந்தது. இந்தியா தனது கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தான்மீது குற்றஞ்சாட்டுகிறது. தனது சொந்த செயற்பாட்டை மறைத்துவைப்பதற்காக பாகிஸ்தான்மீது குற்றஞ்சாட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். இந்தியப் பாதுகாப்புப் படைகளினால் காஷ்மீர் மக்கள் மோசமான வடிவத்திலான மனித உரிமை மீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் பல தசாப்தமாக உட்பட்டுள்ளனர். சுயநிர்ணய உரிமையைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் மேலும் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை, பாகிஸ்தான் தவறான குற்றச்சாட்டுகளைத் தனது நாடு குறித்து தெரிவிப்பதாக இந்தியத் தூதுக்குழுவின் மனிஷ் குப்தா சாடியுள்ளார். பயங்கரவாதப் பிரச்சினை குறித்து மட்டுமே பாகிஸ்தான் கவனத்தைச் செலுத்த வேண்டும். அதனை இல்லாமல் செய்வது குறித்து கவனத்தைத் திருப்ப வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக