செவ்வாய், 26 அக்டோபர், 2010

நுரைச்சோலை தீ விபத்து குறித்து இரகசிய பொலிஸாரும் விசாரணை

புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இடம் பெற்ற தீ விபத்து தொடர்பான விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் இரகசிய பொலிஸாரும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் அதிகாலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.    அந்த தீ விபத்துக்கான சரியான காரணங்கள் கண்டறியப்படாத  நிலையிலேயே  அது தொடர்பான விசாரணைகளில்  இரகசிய பொலிஸார்   ஈடுபட் டுள்ளதாக  அவர் தெரிவித்தார்.
அனல் மின் நிலையத்தில்  இடம் பெற்ற தீ விபத்தினை விமானப் படையினர், தீயணைப்புப் படையினர், பொலிஸார் என அனைவரும் ஒன்றிணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து மின் சக்தி அமைச்சர்,   பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய உட்பட  முக்கியஸ்தர்கள் பலரும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
சம்பவத்திற்கு பின்னால் யாராவது உள்ளனரா என்பது தொடர்பில் கண்டறிவதற்காகவே இரகசிய பொலிஸாரையும் விசாரணைகளில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கென இரகசிய பொலிஸ் குழு வொன்று நேற்று அனுப்பப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள போதும் சேத விபரங்கள் தொடர்பான மதிப்பீடு இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக