திங்கள், 1 நவம்பர், 2010

எடிட்டிங் நடந்து, முதல் பிரதி தயார் ஆனபின்பும் இவரது பணி ஓயாது.

ஸ்கிரிப்ட் அசிஸ்டென்ட்.
தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, எல்லா மொழிப் படங்களிலும் கதை விவாதம் என்ற ஒரு விஷயம் நடைபெறும். இயக்குனரின் மனத்தில் இருக்கிற கதையை ஒரு குழுவாக அமர்ந்து விரிவு செய்வது. இதைத்தான் ஸ்டோரி டிஸ்கஷன் என்று சுருக்கமாக அழைக்கிறோம்.
கருணாஸும் மஞ்சள் சட்டையும்
இப்படி உருவான ஒரு கதையை ஒன் லைன் என்று சொல்லக்கூடிய ஒரு வரிப் பகுதிகளாகப் பிரித்துக்கொள்வார் இயக்குனர். மொத்தம் 70 வரிகளாக அந்தக் கதை பிரிக்கப்படும். மணிரத்னம் 60 வரிகளாகப் பிரித்துக்கொள்வாராம். அதற்குமேல் போகக் கூடாது என்பது அவரது பாணி.
இப்படி உருவான ஒருவரிக் கதை பல பிரிண்டுகள் எடுக்கப்பட்டு உதவி இயக்குனர்களுக்கு ஆளுக்கொரு பிரதி வழங்கப்படும். இதைப் படித்துவிட்டு தங்கள் கருத்துகளை எழுத்து வடிவத்தில் டைரக்டரிடம் இந்த உதவி இயக்குனர்கள் அளிப்பார்கள். அதன்பிறகுதான் இந்தக் கதைக்குத் திரைக்கதை எழுத உட்காருவார் டைரக்டர். (இப்போது பல இயக்குனர்கள் ஒன் மேன் ஷோ என்பதுபோல எங்காவது மலையடிவாரத்திலோ, குளுகுளு பிரதேசத்திலோபோய் உட்கார்ந்து முழுசாக எழுதியே கொண்டுவந்து விடுகிறார்கள்)
வசனத்தைப் பிறர் எழுதுகிற சவுகர்யமும் இருக்கிறது. ஆனால் பல இயக்குனர்கள் அதையும் அவர்களே செய்துவிடுகிறார்கள். சரி… இதில் ஸ்கிரிப்ட் அசிஸ்டென்டுகளின் வேலை என்ன?
திரைக்கதையை எழுதியபின் படப்பிடிப்புக்குப் போகும் இயக்குனர் அங்கு போய் சில மாற்றங்களைச் செய்வார் அல்லவா? அங்கு அவர் ஸ்கிரிப்டில் செய்யும் மாற்றங்களை இவர் உடனுக்குடன் பதிவு செய்துகொள்ளவேண்டும். வசனத்தை வேறொரு எழுத்தாளர் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வசனகர்த்தாவோடு இணைந்து பணியாற்றுவதும் இவரது வேலை. சில எழுத்தாளர்கள் முழு வசனத்தையும் கொடுக்காமல் சிறிய சிறிய பகுதிகளாகக் கொடுப்பார்கள். அப்போதெல்லாம் நேரில் சென்றோ, தொலைபேசி வழியாகவோ குறிப்பிட்ட பகுதிகளை வாங்கி எழுதிக்கொள்வதும் இவரது வேலை.
கொஞ்சம் பெரிய எழுத்தாளர்கள் என்றால் ஸ்கிரிப்ட் அசிஸ்டென்ட் பாடு திண்டாட்டம்தான். அவர் வாயால் சொல்லச் சொல்ல இவரேதான் எழுதவேண்டும். வசனகர்த்தாவோடு முடியாது இவர்களின் பணி. பாடலாசிரியர்கள் முழுப் பாடலையும் கொடுக்காமல் இழுத்தடிப்பதும் நடக்கும். அப்போது வரி வரியாகப் பாடல்களை வாங்கிச் சென்று இசையமைப்பாளரிடம் சேர்ப்பதும் இவரது வேலை.
ஒருவழியாக படப்பிடிப்புக்குச் சென்றால், அங்கே மானிட்டர் (படப்பிடிப்பு நடப்பதைக் காட்டும் டிவி) பக்கத்திலேயே அமர்ந்திருப்பார் இவர். கேரக்டர்கள் பேசுகிற வசனங்களைக் குறித்துக் கொள்வார்.
கடைசியில் படம் முடிந்து எடிட்டிங் நடந்து, முதல் பிரதி தயார் ஆனபின்பும் இவரது பணி ஓயாது. முழுப் படத்தையும் பார்த்து ஸ்கிரிப்ட் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். சென்சாருக்கு என்று ஒரு ஸ்கிரிப்ட் – ஷாட் வாரியாகத் தயாரிப்பதும் இவர் பணியே. மற்ற உதவி இயக்குனர்களுடன் ஒப்பிடும்போது இவருக்கு வேலை குறைவு என்பதாலோ என்னவோ, பல நேரங்களில் எடுபிடியாகவும் பயன்படுத்திக் கொள்வார்கள் இவரை.
சும்மாதானே இருக்கீங்க. போய் ஹீரோ, ஹீரோயினை ரூம்லேர்ந்து பிக்கப் பண்ணிட்டு வாங்க என்று அனுப்பிவிடுகிற கொடுமையும் நடக்கும். படம் பிடிக்கப்பட்ட பிலிம் கேன்களை சுமந்து சென்று பொறுப்பாக வைக்க வேண்டும். சில நேரங்களில் திடீர் அதிர்ஷ்டம்கூட அடிக்கும். எங்காவது வட மாநிலங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது இந்த பிலிம் கேன்களை இவர் வசம் ஒப்படைத்து விமானத்தில் அனுப்பிவைப்பார்கள். அதை விமான நிலையத்தில் ஸ்கேன் செய்துவிடாமல் லேபில் கொண்டுவந்து சேர்க்கிற பெரும் பொறுப்பையும் சுமப்பார்.
அடுத்தவர், முதல் துணை இயக்குநர்.
இவரது பணி காஸ்ட்யூம்களை கவனிப்பது. படத்தில் கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ தவறுகள் நடக்கலாம். ஆனால் இந்த டிபார்ட்மென்ட்டில் தவறு ஏற்பட்டால் மட்டும் பளிச்சென்று கண்ணுக்குத் தெரியும். அதனால் இவரது பணி மற்றவர்களைவிடச் சற்றுக் கூடுதல்தான். படத்தின் காஸ்ட்யூமருடன் இணைந்து பணியாற்றுவது இவரது வேலை. கதையைக் கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்தக் கதைக்குள்ளேயே கரைந்து போயிருக்கவேண்டும் இவர். திரைக்கதையின் போக்கில் அந்தக் கதாபாத்திரம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதையெல்லாம் எந்நேரமும் அசை போட்டுக்கொண்டே இருக்கவேண்டிய நபர் இவர்தான்.
காஸ்ட்யூம் அசிஸ்டென்ட் பற்றிப் பேசுகிறபோது, ஒரு படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்வது மிகவும் முக்கியம். பாபா படத்தின் படப்பிடிப்பு. ரஜினியுடன் கவுண்டமணி, கருணாஸ் என்று பெரிய கூட்டமே எப்போதும் ஃபிரேமுக்குள் இருக்கும். இரண்டு மாதத்துக்கு முன்பு சென்னையில் எடுத்த ஒரு காட்சியின் தொடர்ச்சியை ஐதராபாத்தில் ஒரு செட் போட்டு அங்கே எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த சீனை இப்போதும் திரையில் பார்ப்பவர்கள் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் தெரியும். நாலைந்து நடிகர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டு எக்கி எக்கி டயலாக் பேசிக்கொண்டிருப்பார் கருணாஸ். எல்லாரும் அறிந்த நடிகர்தானே. இவரை எதற்குப் பின்னுக்குத் தள்ளவேண்டும்? அந்த டயலாக்கை முன்னால் நின்றே பேசியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை? கொஞ்சம் ஊன்றிப் பார்க்கிற ரசிகனாக இருந்தால் அவன் மனசுக்குள் இந்தக் கேள்வி ஓடியிருக்கும். இங்குதான் இருக்கிறது பெரிய பிரளயமும் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரஸ்யமும்.
மஞ்சள் கலரில் ஒரு சட்டை அணிந்திருப்பார் கருணாஸ். அதில் சிவப்பு வண்ணத்தில் கோடுகள் இருக்கும். இந்தச் சட்டையை இவர் அணிந்து நடித்த காட்சியின் கன்ட்டினியூடிதான் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது. உதவி இயக்குனர்கள் அத்தனை பேரும் செட் பிராப்பர்ட்டி என்று சொல்லப்படுகிற கன்ட்னியூடி ஐட்டங்களோடு போய்ச் சேர்ந்துவிட்டார்கள். காலையில் எடுக்கவேண்டிய காட்சிகளுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைக்கும்போதுதான் கருணாஸ் அணிந்துகொள்ளவேண்டிய சட்டையைச் சென்னையிலேயே தவற விட்டிருப்பது தெரியவந்தது உதவி இயக்குனர்களுக்கு. காஸ்ட்யூம் கன்ட்டினியூடி பார்க்கும் உதவி இயக்குனருக்கு ரத்தமே சுண்டிப்போகிற அளவுக்கு பயம். என்ன செய்வது? அந்த இரவுக்குள் இதே டிசைனில் துணி கிடைத்தால் கூடவே வந்திருக்கும் கம்பெனி காஸ்ட்யூமரிடம் சொல்லி தைத்துவிடலாம். அவரது துரதிருஷ்டம் இரவு பத்து மணிவரை ஊரெல்லாம் அலைந்து திரிந்து தேடியும் கிடைக்கவே இல்லை அந்த டிசைன். வேறு வழியில்லாமல் மஞ்சள் கலரில் ஒரு சட்டையை வாங்கினார் அவர். அதில் சிவப்பு கலர் பெயின்ட்டைக் கொண்டு கோடுகள் வரைந்தார். என்னதான் மெனக்கட்டு வரைந்தாலும் பர்பெக்‌ஷன் பல்லை இளித்தது.
காலையில் கருணாசைச் சந்தித்து தனிப்பட்ட முறையில் கண்ணீர் சிந்திய அசிஸ்டென்ட், அண்ணே… உங்களை நாலு பேருக்குப் பின்னாடி நிக்க வச்சுடுறேன். (இந்தச் சதிக்கு இணை இயக்குனரும் உடந்தை. வேறு வழி?) இந்தச் சட்டையைப் போட்டுகிட்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்கண்ணே. டைரக்டருக்குத் தெரிஞ்சா ஃபீசைப் புடுங்கிடுவாரு என்றார் கெஞ்சலாக. சூப்பர் ஸ்டார் பக்கத்தில் நின்று பேசுகிற வாய்ப்பைக் கெடுத்தாரே என்று கோபப்பட்டாலும், தவிர்க்க முடியாமல் ஒப்புக்கொண்டார் கருணாஸ். இப்போது புரிகிறதா காஸ்ட்யூம் பொறுப்பைக் கவனிக்கிற உதவி இயக்குனரின் வேலை?
படப்பிடிப்பு நேரத்தில் மட்டுமல்ல, படப்பிடிப்பு நடைபெறாத காலங்களில்கூட இவர் கண்களில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு கவனிக்கவேண்டும். ஒரே சட்டையை இரண்டுக்கு மேற்பட்ட செட்கள் தைத்து வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம். (பட்ஜெட்டும் தயாரிப்பாளரும் இடம் கொடுத்தால்) பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை என்றால் அந்தச் சட்டை சமாசாரங்களைப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது நன்று. ஏனென்றால் சட்டைகள் திருட்டுப் போனாலோ, டேமேஜ் ஆனாலோ வேறொன்றை தயார் செய்யப் பயன்படும் அல்லவா?
இந்த காஸ்ட்யூம் அசிஸ்டென்ட்டுகளுக்கு இன்னும் ஒரு சங்கடம் கூடவே வந்து சேரும். எப்படித் தெரியுமா? பாலா, செல்வராகவன் மாதிரி இயக்குனர்கள் படத்தில் வேலை செய்பவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.
கார்த்தியின் காஸ்ட்யூம்கள்
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வேலை பார்த்த ஒரு காஸ்ட்யூம் அசிஸ்டென்ட்டின் அனுபவம் இது. படத்தில் கதாநாயகன் கார்த்திக்குக்கு ஒரே காஸ்ட்யூம்தான். அந்தப் படத்தைக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் படமாக்கினார் செல்வராகவன்.
படப்பிடிப்பில் இந்த அரை டவுசரையும், லுங்கியையும் அருகில்  எடுத்து வந்தாலே அலற ஆரம்பித்தார் கார்த்தி. அத்தனை முடை நாற்றம் அதிலிருந்து. ஒவ்வொரு முறையும், ‘இதைக் கொஞ்சம் துவைச்சுக் கொடுக்கக் கூடாதா?’ என்பாராம் உதவி இயக்குனரிடம். ஆனால் செல்வராகவனின் கண்டிஷன், எக்காரணத்தை முன்னிட்டும் அந்த காஸ்ட்யூம்களைத் துவைக்கக் கூடாது என்பது.
கார்த்தியின் கெஞ்சலைக் கண்டு மனமிரங்கிய உதவி இயக்குனர், ஒரு பிரேக் காலத்தில் அந்த சமாசாரங்களைத் துவைத்து வைத்துவிட்டார். மன மகிழ்ச்சியோடு கார்த்தி அதை அணிந்துகொண்டு எதிரே வர, ருத்ர தாண்டவம் ஆடினார் செல்வா. என்னைக் கேட்காம ஏன்யா துவைச்சீங்க என்று கடிந்துகொண்டதோடு, அந்த லுங்கியையும் டவுசரையும் மண்ணில் போட்டு புரட்டி எடுத்து, பின்பு போடச் சொன்னார் கார்த்தியை!
இந்தச் சம்பவத்தை கேட்டுவிட்டு கார்த்தியின் மீது அவ்வளவு கோபமா செல்வராகவனுக்கு என்று கேட்கக் கூடாது. ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஏன் அந்தச் சட்டை அழுக்காக இருக்கவேண்டும் என்ற காரணம். ஒரு கூலித் தொழிலாளியாக ரீமா சென், ஆன்ட்ரியாவுடன் காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்திருப்பார் கார்த்தி.
அவுட்டோர் போகும்போது படப்பிடிப்புச் சாதனங்களை ஒரு வண்டியில் ஏற்றி அனுப்புவார்கள். பெட்ஃபோர்டு என்று சொல்லப்படும் அந்த வண்டியில் மற்ற பொருட்களோடு காஸ்ட்யூம்களையும் அனுப்பி வைப்பது அவ்வளவு சேஃப்ட்டியில்லை. சில பெட்ஃபோர்டுகளில் மிஸ்டர் எலியாரும் குடும்பம் நடத்திக்கொண்டிருப்பார் என்பதால், காஸ்ட்யூம்களைக் கவனிக்கும் உதவி இயக்குனர் அதைத் தன்னுடன் பஸ்ஸிலோ ரயிலிலோ எடுத்துச் செல்வது உகந்த செயல் என்கிறார்கள் எலிக்குத் துணியைப் பறிகொடுத்த முன்னோடிகள்!
-தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக